1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (13:03 IST)

மீண்டும் +2 மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை! – திருவள்ளூரில் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திருவள்ளூரிலும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்கள் முன்னதாக கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றதும், பள்ளி சூறையாடப்பட்ட சம்பவமும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது திருவள்ளூரிலும் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள அரசு உதவி பெறும் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் சரளா என்ற மாணவி படித்து வந்துள்ளார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

வழக்கம்போல காலையில் பள்ளிக்கு கிளம்பிய அவர் உணவருந்தும் அறையில் மற்ற பெண்கள் இருந்தபோது தங்கும் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் அவரது தோழிகள் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அலறியுள்ளனர். இதுகுறித்து விடுதி பராமரிப்பாளர் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல சிறுமியின் சொந்த ஊரான தக்களூரிலும் அசம்பாவிதத்தை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.