வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:25 IST)

சும்மா கிழி..! சமாதான கூட்டத்தில் ஆவேசம்! – கோப்புகளை தூக்கியெறிந்த கோட்டாட்சியர்!

திருமங்கலம் கல்குவாரி விவகாரத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் பெண் கோட்டாட்சியர் கோப்புகளை ஆவேசமாக தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்குவாரியிலிருந்து வெளியேறும் தூசுக்களால் சுற்றுசூழல் மாசடைந்து உள்ளதோடு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்குவாரியில் வெடிகள் பயன்படுத்தப்படுவதால் வீடுகளில் விரிசல் விழுவதாகவும் கருவேலம்பட்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அதன்மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு கல்குவாரியை மூட உத்தரவிட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் கல்குவாரி திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஊர் மக்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்தியுள்ளார் திருமங்கலம் பெண் கோட்டாட்சியர் சௌந்தர்யா.

ஆனால் மக்களுக்கு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களில் சிலர் கோட்டாட்சியர் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாய் செயல்படுவதாக நேரடியாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோட்டாட்சியர் சௌந்தர்யா மேசை மீது இருந்த ஆவணங்களை தூக்கி வீசி ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு எழுந்து எந்தவித முடிவும் எட்டப்படாமலே கூட்டம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கல்குவாரியை மூடாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.