1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (12:16 IST)

காவலரை திட்டி, எட்டி உதைத்த முன்னாள் எம்.பி! – சேலம் சுங்கசாவடியில் பரபரப்பு!

சேலம் சுங்கசாவடியில் சோதனை பணியில் இருந்த காவலர்களை அவதூறாக பேசி தாக்கிய முன்னாள் எம்.பியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நேற்று இரவு சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக அதிமுக முன்னாள் எம்.பி அர்ஜுனன் காரில் வந்துள்ளார். இவர் தருமபுரி எம்.பியாக பதவி வகித்தவர்.

அவரது காரை நிறுத்தி போலீஸார் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் போலீஸாரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரும் பதிலுக்கு பேச கோபமடைந்த அர்ஜுனன் காவல் ஆய்வாளரை தள்ளியதும், அவர் திரும்ப அர்ஜுனனை தள்ளவும் சிறிய அளவில் கைகலப்பு எழுந்துள்ளது.

பிறகு அங்கிருந்த சிலர் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. முன்னாள் எம்.பி தகாத முறையில் நடந்து கொண்டதற்கு அவர்மீது நடவடிக்கை தேவை என பலர் கருத்து கூறி வருகின்றனர்.