திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் 40 அடி உயரத்தில் வேல்.. பக்தர்கள் பரவசம்..!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பராமரிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 137 அடி உயரம் மற்றும் 9 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி, கட்டபொம்மன் காலத்தில் இருந்த ராஜகோபுர மணி புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராஜகோபுரத்தில் புதிதாக 40 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான வேல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேல் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தீவிரமாக நடைபெற்றது.
நேற்று இந்த வேல் பொருத்தப்பட்ட நிலையில், அதில் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் "ஓம்" என்ற எழுத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தில் உள்ள வேல், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் தெளிவாக காணக்கூடியதாக இருக்கும் என்றும், பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva