வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (10:20 IST)

மரத்தில் கார் மோதி விபத்து: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மகன் உள்பட 3 பேர் பலி!

தஞ்சாவூர் அருகேயுள்ள கோவிலில் கிடாவெட்டு திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்த்துக்கொண்டிருந்தபோது பனை மரத்தில் கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ மகன் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் கபிலன் (வயது 25). இவர் தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில் அருகேயுள்ள ஆர்சுத்திப்பட்டு அங்காளம்மன் கோவிலின் கெடாவெட்டு விழாவுக்கு தனது நண்பர்கள்  8 பேருடன் காரில் சென்றார். விழா முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்த போது அந்த காரை மன்னார்குடி புதிய வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் (26) என்பவர் ஓட்டிவந்தார் .
 
சடையார்கோவில்-சாலியமங்கலம் சாலையில் சின்னபுளிக்குடிகாடு கிராமம் அருகே கார் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள  பனை மரத்தில் மோதி கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த பிரகதீஸ்வரன், கபிலன், மோகன், ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜா , கருணாநிதி அருளரசன் , ராஜவர்மன் , விவேக் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 
 
இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருவிழாவுக்கு சென்ற போது விபத்து நேரிட்டு முன்னாள் எம்.எல்.ஏ மகன் உள்பட மூன்று பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.