வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:18 IST)

மெரினா கடற்கரையில் உடல்களை புதைக்க தடை கோரிய மனு; தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மெரினா கடற்கரையில் உடல்களை புதைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் காந்திமதி தாக்கல் செய்த மனுவில், மெரினாவில் பிணங்கள் புதைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக  பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மாநகராட்சி சட்டவிதிகளின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர்தான் அனுமதி வழங்கவேண்டும். ஏற்கனவே மெரினா கடற்கரையில் சி,என்.அண்ணாதுரை,  எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரது உடலை புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அங்கு வேறு யாராவது உடலை அடக்கம்  செய்ய மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினால், கண்டிப்பாக கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழலை அது அழித்து விடும். அதனால் மயானங்கள் தவிர்த்து  பிற பகுதிகளில், பிணங்களை புதைக்க விதிமுறைகளை இருவாக்கும்படி தலமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்திரவிட வேண்டும் என  கோரியுள்ளனர்.
 
இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பான முறையீட்டு நேரத்தில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி, சில காரணங்களுக்காக இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது. தன்னுடைய மனுவை திரும்ப பெற்றுகொள்வதாக வழக்கறிஞர் காந்திமதி தெரிவித்ததையடுத்து, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.