1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:07 IST)

கள்ளக்காதலன் தலையை வெட்டி மனைவிக்கு பரிசளித்த கணவன்! – தென்காசியில் அதிர்ச்சி!

தென்காசியில் தன் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் தலையை வெட்டிய கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.



தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கும் கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்த இசக்கியம்மாளுக்கும் சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்துள்ளது. இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இசக்கியம்மாளுக்கு கண்ணாடிக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் வேலுச்சாமிக்கு தெரிய வந்த நிலையில் முருகனுடனான தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு இசக்கியம்மாளிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கியம்மாள் தனது அம்மா வீடான புதுக்குடி கிராமத்திற்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதற்கு முருகனே காரணம் என ஆத்திரமடைந்த வேலுச்சாமி வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த முருகனிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் கைகலப்பாக மாற ஆத்திரமடைந்த வேலுச்சாமி அரிவாளை எடுத்து முருகனின் தலையை துண்டாக சீவியுள்ளார்.

பின்னர் அதை ஒரு பையில் எடுத்து போட்டுக் கொண்டு நேராக புதுக்குடி கிராமத்திற்கு சென்று இசக்கியம்மாளை பார்த்து அந்த தலையை காட்டியுள்ளார். அதை கண்டு அலறிய இசக்கியம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் வேலுச்சாமியை கைது செய்து முருகனின் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K