வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (13:06 IST)

தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின்னர் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
திருநெல்வேலி மாவட்டம் பெரிதாக இருப்பதால் தென்காசியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உதயமாகியுள்ளது. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிய தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கையை முதல்வர் இன்று நிறைவேற்றியுள்ளார்.
 
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதியதாக 'செங்கல்பட்டு' மாவட்டம் உருவாகியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.