வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (11:28 IST)

தண்ணீர் இல்லை என்று சொல்ல ஸ்டாலினுக்குத் துளிகூட உரிமை இல்லை – தமிழிசைக் கண்டனம் !

தமிழகத்தில் இன்று நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு திமுக வும் ஒரு மிக முக்கியமானக் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

துளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ திமுகவிற்கோ துளிகூட உரிமை இருக்கிறதா என்றால் இல்லை ! இன்று தமிழகத்தில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொடுத்தாக வேண்டும், போர்க்கால நடவடிக்கையில் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும...அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி,ஆலோசனைகள் வழங்கி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நிலை மாறி தாகத்தையும் தவிப்பையும் தனது அரசியல் பதவி தாகத்தைத் தணிப்பதற்குத்தான் திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகள் பயன்படுத்துகின்றன. இன்று ஸ்டாலின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசுகிறார், இது இன்று மட்டும்….. தண்ணீர் பிரச்சினை உடனே ஏற்பட்ட பிரச்சினையா? பலமுறை தமிழகத்தை ஆண்ட திமுகவிற்கும்... பல ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கெடுத்த திமுகவிற்கும் இதில் பங்கில்லையா ? பங்கு மட்டுமல்ல தமிழகத்திற்குத் தண்ணீர் கொண்டு வர முயற்சித்த வீராணம் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தடுத்தவர் திமுகவினர்...

1967 ஆண்டில் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்ட வீராணம் திட்டம்..... 37 ஆண்டுகளாக திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் கிடப்பில் போடப்பட்டு 2004-ம் ஆண்டில் ஜெயலலிதாவின் முயற்சியால்தான் வர ஆரம்பித்தது...
திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த தொலைநோக்குத் திட்டங்கள் என்ன? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காவிரியில் தண்ணீரை மேட்டூரில் அணைகட்டி தஞ்சைத் தரணியில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து செய்தது.... அதைப்போல அதற்குப்பிறகு பலமுறை ஆண்ட திமுக எடுத்த தொலைநோக்குத் திட்டம் என்ன?

கேரளா- தமிழ்நாடுகளுக்கு இடையில் உருவான பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு பல ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட்ட திட்டம், ஒரு நதியுடன் இன்னொரு நதியை இணைக்கும் திட்டத்திற்கு நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்தது....அதற்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக இதைப் போன்ற திட்டங்களுக்கு எடுத்த முயற்சி என்ன? 2003-ம் ஆண்டில் நதிநீர் இணைப்புக்காண ஓர் வழக்கில் மத்திய,மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டால் 10 ஆண்டுகளில் நதிகளை இணைத்து விட முடியும் என்றும் 2015 -ம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு வந்துவிடும் எனவும் தீர்ப்பு சொல்லப்பட்டது... அதனால் திரு.வாஜ்பாய் அதற்கான முழு முயற்சியும் மேற்கொண்டார் ஆனால் 2004-ல் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்... அதற்குப்பின் திமுக-காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தனர் நதிநீர் இணைப்பை பற்றி துளிகூட சிந்திக்கவில்லை... இன்று தண்ணீரைப்பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இருக்கிறதா? முயற்சி எடுக்காதது மட்டுமல்ல நதிகள் இணைப்பிற்கு எதிராக பேசினார்கள்...

நதிகள் இணைப்பு இயற்கைக்கு எதிரானது என ராகுல்காந்தி கருத்து தெரிவித்தார்....கூட்டணியில் இருந்த திமுக பார்த்துக்கொண்டுதான் இருந்தது...
மத்திய பிரதேசத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த மன்மோகன் சிங் அவர்கள் நதிகள் இணைப்பு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமானால் இணைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்... அப்போது நீர் பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டணியில் இருந்த திமுக வைத்த தொலைநோக்குத் திட்டம் என்ன?

நதிகள் இணைப்பு திட்டத்தை திரு.வாஜ்பாய் அவர்கள் நினைத்தது போல் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தால் அதன் மதிப்பீடான 5 லட்சத்து 60 ஆயிரம் கோடியில் இதனை நிறைவேற்றிருக்கலாம்... அதாவது 2-ஜியில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவில் 4 மடங்கு செலவிட்டிருந்தால் நாடே வளமாயிருக்கும்... ஏன் முயற்சி செய்யவில்லை? தேசிய நதிகளை நிறைவேற்றாவிட்டாலும் தென்னக நதிகளான மகாநதி- தாமிரபரணி இணைப்புக்காவது தமிழக முயற்சி செய்திருந்தால் தமிழகம் பலன் பெற்றிருக்கும்.... இதற்கு தமிழகத்தை பலமுறை ஆண்ட ஸ்டாலின் கட்சியின் பதில் என்ன?

இன்று என்ன பெரிய குஜராத் மாடல் எனக் கிண்டல் செய்யும் ஸ்டாலினுக்கு நான் சொல்லிக்கொள்வது குஜராத் நர்மதா நதியிலிருந்து ஒரு இணைக்கால்வாய் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 56 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. இதற்கு முன்னால் அந்தப்பகுதிப் பெண்களை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் 8 கிலோ மீட்டர் தூரம் தண்ணீருக்கு பெண்கள் குடத்துடன் அலைய வேண்டும். ஆனால் இந்த நர்மதா திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அங்கே குடிநீர் பிரச்சனையும் தீர்ந்தது... நல்ல விவசாயம் நடக்கிறது... இதேபோல தொலைநோக்குத் திட்டத்தை ஸ்டாலின் கட்சி என்றாவது யோசித்தது உண்டா?  ஓர் கால்வாய் தண்ணீரே ஒரு பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கியது என்றால் நதிகள் இணைப்பு, கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய்த் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலே தமிழ்நாடு சோலைவனம் ஆகியிருக்கும்... இத்தகைய முயற்சியை மக்கள் பல முறை ஆள வாய்ப்பு கொடுத்தும் திமுக ஏன் மேற்கொள்ளவில்லை?

ஆக நாட்டு மக்களுக்கு வளர்ச்சியைத் தர பாஜக கூட்டணியால் மட்டுமே முடியும் அதன்படி உடனே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் திட்டம்தான் காவிரி - கோதாவரி இணைப்புத்திட்டம்... ஆக இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்,தமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்டும் ஆனால் இதை குறை கூறுவதற்கோ, அரசியல் லாபம் தேடுவதற்கோ ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை...