வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:55 IST)

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த... புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த... புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
தற்போது ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
 
இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் பரவாமல் ஆரம்பத்திலேயே தடுக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 12 இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை மேற்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது. 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த... புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
இதனைத்தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு. 
2. விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 
3. விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் அறிகுறி கண்டறியப்படும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர். 
4. பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானாலும் 7 நாட்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர். 
5. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தங்களது விவரங்களை குறிப்பிட்டு 7 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்.