வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (13:31 IST)

ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.!

Cabinet Meeting
தமிழகத்தில் ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
 
உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 
 
தமிழகத்தில் தொழில்களுக்கு முதலீட்டு அனுமதி அளிப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் விளக்கமாக கூறினார்.
 
அப்போது பேசிய அவர், அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இந்த முதலீடுகள் மூலம் 24,700 நபர்களுக்கு புதியதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறினார்.
 
தூத்துக்குடியில் செம்பா நிறுவனத்துக்கு முதலீடாக ரூ. 21,340 கோடி திட்டம், காஞ்சிபுரத்தில் ரூ. 2600 கோடி முதலீட்டில் 2800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டம் என 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
 
வரும் 17ம் தேதி நாட்டிலேயே முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் வல்லம்படுகையில் ரூ.206 கோடியில் 18,000 தொழிலாளர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் இட கட்டிடம் திறக்கப்படுகிறது என்றும் பசுமை எரிசக்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.