1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (12:29 IST)

தாம்பரம் – தூத்துக்குடி முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்! – பயணிகள் மகிழ்ச்சி!

பொங்கலையொட்டி மக்கள் பயணிக்க ஏதுவாக தாம்பரம் – தூத்துக்குடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



பொங்கலுக்கு சென்னையிலிருந்து பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் நிலையில் ஏற்கனவே பேருந்து, ரயில்களில் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது.

அதன்படி, ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முன்பதிவு இல்லா ரயில் (எண் 06001) காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக தூத்துக்குடிக்கு மாலை 22.45க்கு சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து (ரயில் எண் 06002) காலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 20.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.  இடையே செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, துடி மேலூர் ஆகிய நிறுத்தங்களில் இந்த முன்பதிவில்லா ரயில் நின்று செல்லும்.


அதேபோல ஜனவரி 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரை, தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு முன்பதிவு ரயிலும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர் சென்று திரும்பும் மக்களுக்கு உதவும் வகையில் ஜனவரி 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு முன்பதிவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் பொங்கலுக்கு பயணிக்க உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K