ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (12:54 IST)

பேரறிவாளனை விடுதலை செய்வதே தீர்வு! – உச்சநீதிமன்றம் கருத்து!

supreme court
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிப்பதே சரியான தீர்வு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் தொடர்ந்து வரும் இந்த வழக்கில் பேரறிவாளனின் விவகாரத்தில் ஆளுனர் இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பதை பேரறிவாளன் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் “பேரறிவாளனை விடுவிப்பது மட்டுமே இந்த வழக்கை முடிக்க ஒரே தீர்வு என நினைக்கிறோம். யார் விடுவிப்பது என்ற சிக்கலில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.