1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (12:03 IST)

2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்!!

2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழ்நாட்டில் அக்கினி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8 ஆம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு ஆகியுள்ளது. 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
 
தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
 
திருச்சி, புதுச்சேரி, கரூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. 28 ஆம் தேதி அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு வெயில் தொடரும் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஆம், இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.