1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (11:20 IST)

தென் மேற்கு பருவ மழை: பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்கள் கண்காட்சி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தென் மேற்கு பருவ மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலத்தில் பன்படுத்தும் சாதனங்களை கோவை மாவட்ட கலெக்டர்  அலுவலகம் அருகே உள்ள தீயணைப்பு தலைமை அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. தீயணைப்பு துறை இயக்குனர் அபாஷ்குமார் உத்தரவின்பேரில், இணை இயக்குனர் சத்தியநாராயணன் மேற்பார்வையில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். தீயணைப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர்.
 
 
பேரிடர்களின் தாக்கத்தில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது காற்றினால் ஏற்படக் கூடிய திடீர் வெள்ளப்பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர் நிகழ்வுகளின் போது அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
 
தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் நீச்சல் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணிக்கு சேவை புரியதக்க வகையில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
 
மேலும், தீயணைப்பு - மீட்புப் பணி நிலையங்களில் நீச்சல் வீரர்கள் மற்றும் வெள்ள மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இப்பயிற்சியினை பின்பற்றி, பேரிடர் நிகழ்வுகளின் போது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களையும், பொதுமக்களையும் பாதுகாத்திட வேண்டும்.
கோவை மாவட்டம் முழுவதும் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மொத்தம் 250 தீயணைப்பு படை வீரர்கள் , 15 பெரிய வாகனங்கள் , 4 சிறிய வாகனங்கள், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நிலையங்களில் மொத்தம் 3 ரப்பர் படகுகள் என்று அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்த தகவலை தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.