வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (20:35 IST)

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி

அதிமுக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்துகொண்டிருந்தாலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் இன்னும் ஒரு அதிருப்தி கூட யாருக்கும் எழவில்லை. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து பள்ளிக்கல்வித்துறையில் அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். 
 
நீட் தேர்வுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீருடை, ஸ்மார்ட் வகுப்பு, பயோமெட்ரி வருகைப்பதிவு, ஸ்மார்ட் கார்டு என ஒவ்வொரு புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து அசத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் கல்விக்கென பிரத்யேக புதிய தொலைக்காட்சி சேவை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்,
 
அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விரைவில் QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே ரீதியில் சென்றால் தமிழக மக்கள் இனி லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை மறந்துவிட்டு அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை