1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (07:23 IST)

2026-க்கு முன்னரே திமுக ஆட்சி கலைக்கப்படும்!' - செல்லூர் ராஜூ பேச்சு

2026 ஆம் ஆண்டுக்கு முன்பே திமுக ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்ததற்கு காரணம் திமுக அரசே என குற்றம் சாட்டி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியபோது ’தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் போதைப்பொருள் கடத்தலில் திமுக தான் உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கிறது என்றும் ஹாலிவுட் படங்களை போல் போதைப்பொருள் கடத்துவதில் ஜாபர் சாதிக் விளங்கி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் ஜாபர் சாதிக் நான்கு நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் மூலம் போதை பொருளை கடத்தி வந்துள்ளார் என்றும் திமுகவுக்கு மிக நெருக்கமாக இருந்ததால் அவரை காவல்துறையினர் நெருங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜேபி தொடர்பில் இருக்கிறார் என்றும் கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தங்கள் கட்சிகளை அடமானம் வைத்து விட்டதாகவும் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்

2026க்கு முன்பே திமுக ஆட்சி கலைக்கப்படும் என்றும் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva