1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (12:55 IST)

எலிசபெத் ராணி மறைவால் சசிகலா எடுத்த அதிரடி முடிவு!

Sasikala
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த சசிகலா எலிசபெத் ராணி மறைவு காரணமாக தனது சுற்றுப் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். 
 
அதிமுகவை காப்பாற்றும் நோக்கில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் பயணத்தை சசிகலா மேற்கொண்டு வருகிறார். சேலம் ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் சசிகலா ராணி எலிசபெத் மறைவு காரணமாக சில மாற்றங்களைச் செய்து உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
“இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, நாடு முழுவதும் நாளை 11-09-2022 அன்று, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுவதால், ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் நாளை 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டத்திற்கு மேற்கொள்ள இருந்த புரட்சிப்பயணத்தை ஒருநாள் தள்ளிவைத்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இதனைத் தொடர்ந்து வருகின்ற 12-09-2022 திங்கள்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.