வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (09:49 IST)

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்: ஓபிஎஸ் அணி கோரிக்கை ஏற்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்: ஓபிஎஸ் அணி கோரிக்கை ஏற்பு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்கள் இன்று காலை 8 மணிக்கு அவசர அவசரமாக அகற்றப்பட்டது. சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் நேற்று இரவு டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலையிலேயே சசிகலா பேனர் அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


 
 
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றியதும் அவரது புகைப்படம் அடங்கிய பேனர்கள் அதிகமாக அதிமுக தலைமை கழகத்தை ஆக்ரமித்து இருந்தது. ஜெயலலிதா இருக்கும் வரை சசிகலாவின் புகைப்படம் எதிலும் இடம் பெறாது. ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும் சசிகலாவின் புகைப்படமே பிரதானப்படுத்தப்பட்டது.
 
சசிகலா சிறைக்கு சென்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் காரணமாக அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓபிஎஸ் அணியின் சார்பில்
கே.பி.முனுசாமி அறிவித்து முட்டுக்கட்டை போட்டார்.
 
இதனையடுத்து சசிகலாவின் பேனர்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்ற மதுசூதனன் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.
 
ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து சசிகலாவின் புகைப்படங்களை அகற்ற கூறிவரும் நிலையில் இன்று அவர்களது கோரிக்கையை ஏற்கும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர் அகற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இரு அணிகள் இடையே பேசிக்கொண்டிருக்கிறோம், பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் உருவாகியிருக்கிறது என நேற்று ஓபிஎஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.