செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (20:30 IST)

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வக்கீல் நோட்டீஸ்: சபரீசன் பதிலடி

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்யப்படுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் போலீஸ் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபரீசனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் எத்தனை பேர், அவர்கள் செய்த கொடூரம் என்ன? அவர்களுக்கு விரைவாக தண்டனை வாங்கி கொடுப்பது எப்படி? என அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படாமல் இந்த விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் பழியை போட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.