வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (10:04 IST)

கருணாநிதி சந்திப்பிற்கு பின் அப்செட்டில் ரஜினி - நடந்தது என்ன?

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

 
தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினி அறிவித்துள்ளார். மேலும்,  பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக கூறியுள்ள ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
 
கருணாநிதியை சந்திக்க வருவதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக ஸ்டாலின் ஓ.கே. சொல்லி விட்டாராம். ஆனால், அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் முக்கிய குடும்ப உறுப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். 

 
ரஜினி சிஸ்டம் சரியில்லை எனக் கூறி வருகிறார். மேலும், அரசியல் கட்சி தொடங்குவது நமக்கு எதிராகவும் முடியும். இந்த நிலையில், அவருக்கு ஏன் அனுமதி அளித்தீர்கள் என கேள்வி எழுப்பினாராம். பொதுவாக முக்கிய நபர்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்கும் ஸ்டாலின், ரஜினியை வீட்டிற்குள் இருந்தவாரே வரவேற்றாராம். 
 
அதன்பின், கருணாநிதியின் அறைக்கு அவரை அழைத்து சென்றார் ஸ்டாலின். கருணாநிதியிடம் சில நிமிடங்கள் பேசிய ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஸ்டாலினிடம் எதுவும் பேசவில்லை என வெளிப்படையாகவே கூறினார்.
 
அதோடு, கருணாநிதியிடம் ரஜினி பேசிக்கொண்டிருந்த பல புகைப்படங்கள் இருந்தாலும், ரஜினி குனிந்து கும்பிடும் படத்தையே திமுக தரப்பு வெளியிட்டுள்ளது. நல்ல புகைப்படங்கள் இருக்க இதை மட்டும் ஏன் வெளியிட்டார்கள் என ரஜினி அப்செட் ஆகியதாகவும் கூறப்படுகிறது.