1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:36 IST)

ரஜினியால் சர்ச்சை! அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரிடம் அரசியல் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்பது தெரிந்ததே. டெல்லிக்கு ஜெயிலர் படப்பிடிப்புக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை என்றும் அடுத்த வாரம்தான் ஜெயிலர் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க உள்ளது என்றும் எனவே டெல்லிக்கு அவர் வேறு ஒரு பணிக்காக சென்று இருந்தார் என்றும் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். சமீபத்தில் டெல்லி சென்று வந்த பின் அவர் திடீரென கவர்னரை சந்தித்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர், ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆளுநருடான இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் மக்களின் கடின உழைப்பு, நேர்மை அவரை மிகவும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டின் நலனுக்காக எவ்வளவு உழைப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். மேலும் ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், அதைப்பற்றி இப்போது உங்களிடம் பேசமுடியாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுநரிடம் அரசியல் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால்

ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது.

இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?

இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொருத்துக்கொள்ளப் போகிறோம்? என  பதிவிட்டுள்ளார்.