வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2017 (14:14 IST)

தலைக்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ; ரூ.50 கோடி ரெடி - அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை களம் இறக்கியுள்ளதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




 

 
திருமங்கலம் தொகுதி பார்முலாவை தொடர்ந்து, தற்போது அனைத்து தேர்தலிலும் மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை பெறும் முறையை அரசியல் கட்சிகள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. வாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என தேர்தல் ஆணையம் பல முறை கெஞ்சிப் பார்த்தும், தண்டனை அளிக்கப்படும் என மிரட்டிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
 
தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் ரூ.50 கோடி வரைக்கும் பணத்தை வாரி இறைக்க முடிவெடுத்திருப்பதாக மாநில உளவுப் பிரிவு போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
ஆர்.கே.நகரில் தற்போது 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்களர்கள் இருக்கின்றனர். அதில் குறைந்த பட்சம் 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 70 ஆயிரம் ஒட்டுகள் பெறுபவரே அந்த தொகுதியில் வெற்றி பெறுவார். கட்சிக்காக குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். பணத்தை இறைத்தால் மட்டுமே மற்ற ஓட்டுகளை பெற முடியும் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளனர். எனவே, தலைக்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கொடுக்க அவர்கள் முன்வந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்வதாக ஏற்கனவே ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளது. ஆனால், தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் என இரண்டு அணியினருமே வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக திமுக கூறி வருகிறது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை ஒடுக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் எவ்வளவு தீவிரம் காட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.