ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (07:30 IST)

தப்பித்தார் "பிரேமலதா விஜயகாந்த்"

தப்பித்தார் "பிரேமலதா விஜயகாந்த்"

அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 
நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில்,  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா.
 
அப்போது, ஏப்ரல் முதல் தேதி திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன்   புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
ஆனால், அந்தக் கூட்டத்தில், தான் அவதூறாக எதுவும் பேசவில்லை என கூறி, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரினார் பிரேமலதா.
 
இந்த நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், 2 வாரத்துக்கு பிரேமலதா தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறி, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
பிரேமலதாவுக்கு நிபந்தனை ஜாமீன் மட்டும் கிடைக்காமல் போய் இருந்தால், புதிய அதிமுக ஆட்சியில் கைதாகும் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை பிரேமலதா பெற்றிருப்பார். ஆனால், ஜாமீன் கிடைத்ததால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார்.