ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (14:17 IST)

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

சென்னை மெரினாவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், சுமார் 15 லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் கூடியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய 20 பேர் வரை மயக்கம் அடைந்ததாகவும், அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில், இன்று விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த நிலையில், கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறி பாய்ந்ததை பொதுமக்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே நேரத்தில், இன்று வெயில் அதிகமாக இருந்ததால், அதிக வெப்பம் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும், 15 பேருக்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாகவும், அதில் சிலர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, தயாராக இருந்த ஆம்புலன்ஸ்களில் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிலர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், கடற்கரையில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva