1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (12:10 IST)

முதல்வர் முதல் அண்ணாமலை வரை: அஜித்தின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள்: 
 
முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்:
 
“நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.  தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஓ பன்னீர் செல்வம் இரங்கல்:
 
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
விஜய் வசந்த் இரங்கல்: 
 
நடிகர் அஜித் குமார் அவர்கள் தந்தை திரு. சுப்ரமணியம் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் நானும்‌ பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். 
 
எடப்பாடி பழனிசாமி இரங்கல்: 
 
தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
 
ஏசி சண்முகம் இரங்கல்: 
 
தமிழ் திரையுலக நடிகர் - சகோதரர் திரு.அஜித் குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் அவர்கள் மறைந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.தந்தையை இழந்து வாடும் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அண்ணாமலை இரங்கல்: 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்