1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (12:04 IST)

தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு..! நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் ஒப்புதல்..!!

highcourt
கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.
 
கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
 
அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.