வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (04:53 IST)

காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய பெற்றோர்கள் - கணவர் குமுறல்

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதை அடுத்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 23). சுந்தர்ராஜ், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் உறையூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
 
இதற்கிடையில், இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகேயுள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வழக்கம் போல் அவர்கள் வேலைக்குச் சென்று விட்டனர்.
 
இருவருக்கும் இடையே திருமணம் நடந்த விஷயம் திவ்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவ்யா பணிபுரியும் கம்பெனிக்குள் நுழைந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த திவ்யாவை தாக்கி அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.
 
பின்னர், இது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சுந்தரராஜ், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் அடித்து இழுத்துச் சென்றதாகவும், அவரை மீட்டு தரும்படியும் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.