1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (09:02 IST)

பாரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்!

பாரந்தூரில் கட்டப்படவுள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.


சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் எனும் திட்டத்தை மாநில அரசு அறிவித்ததில் இருந்து ஏகனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் நிலம் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை.

இவர்களது போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய கிராம மக்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் ’நீர்நிலைகளை காப்போம், ஏகனாபுரத்தை விட்டு வெளியேறுங்கள், ஏகனாபுரம் மக்களை ஏமாற்றாதீர்கள், விவசாயம் வேண்டும், விமான நிலையம் தேவையில்லை’ என முழக்கங்களை எழுப்பினர்.

இந்த விமான நிலையம் ரூ.20,000 கோடி செலவில் மாநில அரசால் கட்டப்படும். இத்திட்டத்திற்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், 1,005 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 13 கிராமங்களில் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அரசு வழங்குகிறது.

சமீபத்திய மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான மாநில அரசின் தொலைநோக்கு பார்வையில் புதிய விமான நிலையம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். இது காலத்தின் தேவை. இந்த விமான நிலையம் வந்தால் மட்டுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும் என்றார்.

கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 80-85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash