1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (15:19 IST)

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

edapadi
டில்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என திமுக அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த முறை டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, மேகதாது அணை கட்டுமான பிரச்சனையை மத்திய நீர்வளத் துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதை அப்போதே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன்  என்றும் அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத் துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத் துறை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் என்றும் அவர் கூறினார். 
 
நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டிய இந்த ஏமாற்று மாடல் அரசு, இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசின் கால்களில் அடமானம் வைத்துவிட்டு, தங்களது குடும்பத்தினருடைய தொழில்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்த நினைக்கும் இந்த கபட நாடக திமுக அரசை கடுமையாகக் கண்டிக்கிறேன் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

 
டில்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என திமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.