வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (13:45 IST)

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

Egg
திருச்சி அருகே தனியார் உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த புகாரில், சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மதிய உணவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் முட்டைகள் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது.  அந்த உணவகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள், குறைந்த விலையில் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் 15 ரூபாய்க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

 
இது குறித்து விசாரணை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். சத்துணவு முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த புகாரில் சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.