1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (11:36 IST)

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது : இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? அன்புமணி

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய விசைப்படகையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிக்கவில்லை. அவர்கள் பயணித்த விசைப்படகு பழுதடைந்து விட்டதால் காற்றின் வேகத்தில் நெடுந்தீவு பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட நிலையில் தான் அவர்களை இலங்கைப் படை கைது செய்திருக்கிறது. உண்மை நிலையை மீனவர்கள் எடுத்துக் கூறியும் இலங்கைக் கடற்படை அதை பொருட்படுத்தவில்லை. சிங்களப்படையினரின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
 
வங்கக்கடலில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த 16-ஆம் நாள் தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றிருந்தனர். முதல் முறை மீன்பிடிக்கச் சென்ற போதே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதிலும் எந்தத் தவறும் செய்யாமல், படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தது மனித நேயமற்ற செயலாகும்.
 
கடந்த ஆண்டில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்களை அடுத்தடுத்து கைது செய்து அச்சுறுத்துவது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது  ஆகியவற்றை சிங்களக் கடற்படையினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். சிங்களப் படையினரின்  இந்த தொடர் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
 
Edited by Mahendran