வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (20:30 IST)

பஞ்சமி நில விவகாரம்: முரசொலி அலுவலகத்தில் நடந்த விசாரணை என்ன?

திமுகவின் நாளிதழான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் குற்றம் சாட்ட, இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து நவம்பர் 19ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளதாகவும், அது குறித்த ஆவணங்களுடன் முரசொலி அறக்கட்டளை தலைவர் உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கும்படியும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துடன் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது 
 
இதனையடுத்து இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் முரசொலி அலுவலகத்தில் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இன்றைய விசாரணையில் முரசொலி கட்டிடத்தின் மூலபத்திரத்தை திமுக சமர்ப்பிக்கவில்லை என்றும், மாறாக பஞ்சமி நிலம் சம்பந்தமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க அதிகாரமில்லை என்று வாதிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது 
 
ஆனால் ஒரு சில ஊடகங்கள் இதனை வேறு விதமாக செய்திகள் வெளியிட்டு வருவதாகவும் பாஜக ஆதரவாளர்கள் தங்களின் டுவிட்டர்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை என்றும் இந்த கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது