வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (09:39 IST)

ஆட்டம் காட்டிய நிவர்: ஆய்வு பணிகளுக்கு கிளம்பும் ஈபிஎஸ் & ஸ்டாலின்!!

நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் தனித்தனியே பயணம். 
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.   
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல மரங்களும் விழுந்துள்ளது. இதனை மாநகராட்சி முழு வீச்சில் சரிசெய்துக்கொண்டு வருகிறது. கடலூரிலும் நிவர் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு கடந்துள்ளது. 
 
எனவே, சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை காலை 10 மணிக்கு நேரில் ஆய்வு செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய கடலூர் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.