வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (08:46 IST)

எடப்பாடியாரை பார்த்து காப்பியடிக்கும் ஸ்டாலின்; அக்கறைலாம் இல்ல! – ராஜேந்திர பாலாஜி சீற்றம்!

நேற்று நிவர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் தேர்தலை மனதில் வைத்தே புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ஏகப்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மின்கம்பங்கள் அறுந்தும், மரங்கள் விழுந்தும் உள்ள நிலையில் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “நிவர் புயல் பாதித்த பகுதிகளுக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நேரில் சென்று முதல்வர் பார்வையிட்டு வருகிறார். புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாத அளவிற்கு ஆவின் பாலகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டதால் புயல் பாதித்த பகுதிகளிலும் பால் விநியோகம் தடைப்படவில்லை” என கூறியுள்ளார்.

மேலும் ”முதல்வர் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்வதை பார்த்து வேறு வழியின்றி ஸ்டாலின் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். சேவை நோக்கத்தில் புயல் பாதித்த இடங்களுக்கு அவர் செல்வதில்லை. சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டே செல்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.