செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (17:57 IST)

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்..! இபிஎஸ் உள்ளிட்ட பேருக்கு புகழேந்தி கடிதம்..!!

Puzandhi
நேரில் சந்திக்க அனுமதி கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவே  காரணம் என்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்திருந்தனர்.
 
இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். 
 
இந்த குழுவின் சார்பில் புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

 
மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புவதாகவும், தனக்கு நேரம் ஒதுக்கி தருமாறும் அந்த கடிதத்தில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.