1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (02:06 IST)

சேகர் ரெட்டி டைரியால் பலர் சிக்குவார்களா? : ரெய்டுக்கு காத்திருக்கும் அதிகாரிகள்!

சேகர் ரெட்டி வீட்டில் டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதை அடுத்து மேலும் பல தொழிலதிபர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

வருமான வரித்துறையினர் கடந்த 8ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபரும், ஒப்பந்தக்காரருமான சேகர் ரெட்டி வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அவரது அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்தனர்.

இதில் ரூ. 131 கோடி ரொக்கமும், 178 கிலோ தங்கமும் பிடிபட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 30 கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும் அடங்கும்.

அதன்பேரில் சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தமிழக அரசிடம் தமக்குள்ள செல்வாக்கு பற்றியும், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டோருடன் தனக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் சேகர்ரெட்டி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சேகர்ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் உறவினர் வீடு உட்பட 13 இடங்களில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் 5 கிலோ தங்கம், 30 லட்ச ரூபாய்புதிய நோட்டுகள், பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சேகர் ரெட்டி வீட்டில் டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியின் நகலை சிபிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் சேகர் ரெட்டி தனது டைரியில் யார், யாருக்கு பணம் கொடுத்தார் என்பது தொடர்பான முழுத் தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த டைரியை அடிப்படையாக கொண்டு வருமான வரித்துறையினர் ஆதாரங்களை திரட்டி, அதனடிப்படையில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.