1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (12:31 IST)

மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை தேவை! – மதுரை நீதிமன்றம் வலியுறுத்தல்!

சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணையில் கருத்து தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்க பரிசீலித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடை உரிமையாளர்கள் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது இறந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து காவல்துறையால் பாதிக்கப்பட்ட பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் காவலர்கள் தொடர்ந்து காவல் பணிகளில் ஈடுபடுவதால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மனநல ஆலோசனைகள் வழங்க டிஜிபிக்கு பரிசீலனை செய்துள்ளனர்.

கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட நீதிபதியை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணையில் முழுமையான உத்தரவை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.