வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (09:23 IST)

ரஞ்சித் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட ஹெச் ராஜா – வழக்கறிஞர்கள் புகார் !

ராஜராஜ சோழன் குறித்து ரஞ்சித் பேசிய விவகாரத்தில் சமுகவலைதளத்தில் அவரது குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட ஹெச் ராஜாவுக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

ரஞ்சித்தின் இந்த கருத்துக்குக் கணடனம் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா டிவிட்டரில் ரஞ்சித் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டிஜிபி –யிடம் புகார் அளித்துள்ளனர். இதில் ‘ரஞ்சித் மீது குற்ற எண்ணத்துடன் அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் உள்ள குடும்பப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் பட்டியலின மக்களைத் தூண்டி சட்டம் - ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்க முயலும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளனர்.