1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (13:03 IST)

சங் பரிவாரக் கும்பலால் அச்சுறுத்தலா? வன்னியரசுக்கு குஷ்பூ பதிலடி!

சங் பரிவாரக் கும்பலால் உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது என நம்புகிறீர்களா என கேட்ட வன்னியரசுக்கு குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார். 

 
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து ஹிஜாப் தடையை நீக்குவதை எதிர்த்து இந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதால் இரு பிரிவினர் இடையே மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த ஹிஜாப் சர்ச்சை விவகாரம் குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ட்விட்டரில், கர்நாடகா மாநிலத்தில் இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச்சொல்கிறதா? இதே தாக்குதலும் அச்சுறுத்தலும் சங் பரிவாரக் கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா குஷ்பு மேடம் என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இதற்கு குஷ்பூ தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, என்னுடைய குழந்தைகள் பள்ளிக்கு சீருடை அணிந்து சென்றனர். இந்திய அடையாளத்தை பெருமையுடன் எடுத்துச் செல்கின்றனர். மதத்தை அல்ல.
 
2005 ஆம் ஆண்டு என்னுடைய குழந்தை டெங்குவால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிடாமல் நீங்களும் உங்களது கட்சியினரும் என் வீட்டை மறித்து போராட்டம் நடத்தினீர்கள். அப்போது, எந்த சங் பரிவார கும்பலையும் நான் பார்க்கவில்லை. அது நீங்களும் உங்களுடைய முதுகெலும்பில்லாத கோழைகளும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.