வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (13:00 IST)

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மூடு விழா நடத்திய கொரோனா?

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழியாக கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
கொரோனாவின் கூடாரமான கோயம்பேடு மார்க்கெட் மூலம் 322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் 131, விழுப்புரம் 76, சென்னை 63, அரியலூர் 42 என கோயம்பேடு கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. 
 
இதனால் கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் உட்பட 7,500 பேரை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. அதோடு கோயம்பேடு காய்கறி சந்தையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனை கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கும் என சிஎம்டிஏ செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்த நிலையில் தற்போது கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.