1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (11:22 IST)

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் விசாரணைக்கு ஆஜர்!

Ayyapan driver
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.


 
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று ஆஜராக வந்துள்ளார்.

முன்னதாக  செய்தியாளர்களை சந்தித்த அய்யப்பன், முதல்முறையாக இங்கு வந்துள்ளதாகவும் உள்ளே சென்றால் தான் என்ன நடக்க போகிறது என தெரியவரும் என கூறினார்.

ஜெயலலிதாவிடம் 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஓட்டுநராக பணியில் இருந்ததாக தெரிவித்த அவர் 2001(2021 என்பதற்கு பதிலாக மாற்றி கூறியிருப்பார்) ஆம் ஆண்டு வரை ஓட்டுநராக இருந்ததாக தெரிவித்தார்.

சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியில் வருவது வரை வாகனத்தை மெயின்டைன் செய்துவிட்டு பின்னர் அதனைக் கொடுத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சொந்த காரணங்களால் தன்னால் வேலைக்கு செல்ல முடியாமல் போனதாகவும் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

கனகராஜ் 2000 க்கு பிறகுதான் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். கனகராஜ் அவரது பழக்கவழக்கம் சரியில்லை என்பதாலும் சொல்வதைக் கேட்காமல் இருந்ததாலும் பணியில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிவித்த அவர் ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் என்ன சொல்லினாலும் கேட்க வேண்டும் அதனை பின்பற்ற வேண்டும் என ஸ்ட்ரிட்டாக இருப்பார் என தெரிவித்தார்.

ஆம் சரியாக இல்லை என்றால் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவித்தார். அதனால் அவரை வேண்டாம் அனுப்பி விடுங்கள் என ஜெயலலிதா கூறிவிட்டதாக கூறினார். கோடநாட்டில் இது போன்று சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எனக்கு தெரியாது கனகராஜ் மட்டும் சிறிது நாட்கள் வேலை பார்த்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா இறந்த பிறகு அவரது 5 வண்டிகள் எனது கண்ட்ரோலில் இருந்தது. அதன் பிறகு சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது இந்த வாகனங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் தெரிவித்தார் எனக் கூறிய அவர் 2021 ஆம் ஆண்டு வரை பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் நாங்கள் அரசியல் சம்பந்தப்பட்டதில் தலையிட மாட்டோம் எனவும் அரசியலுக்குள் நாங்கள் செல்வது ஜெயலலிதாவிற்கும் பிடிக்காது என தெரிவித்தார்.

பத்தாண்டுகளாக பேச்சிலர் வாழ்க்கையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் தான் தங்கி இருந்ததாகவும் அதன் பின் திருமணமாகி தனியாக வந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கோடநாடு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் ஆஜரானதாகவும் தற்பொழுது இங்கு முதல்முறையாக வந்திருப்பதாக தெரிவித்தார்.