1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (16:00 IST)

கிறிஸ்துமஸ் தாத்தா கூட இவ்ளோ குடுக்கல! நக்கலடித்த கே.எஸ்.அழகிரி!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சேகரிக்க பரிசுப்பொருட்கள் வழங்குவதை பகடி செய்து பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தொடர்பான 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் மனுக்களுக்கான பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போதே வேட்பாளர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுப்பது குறித்தும் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஆனாலும் சில ஊராட்சி அமைப்புகளில் நூதனமான வகையில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கலில் வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு பிரியாணி விருந்து அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக அறிந்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அதை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் தேர்தலில் பரிசுப்பொருட்கள் மறைமுகமாக அளிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ”உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலர் கிராமப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கும் பரிசுப்பொருட்களை விட அதிகமான பரிசுப்பொருட்களை வழங்கி வருகின்றனர்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.