1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:01 IST)

ஜெயலலிதாவின் ஆன்மா இப்போதுதான் நிம்மதி அடைந்திருக்கும்: தீபக்

ஜெயலலிதாவின் ஆன்மா இப்போதுதான் நிம்மதி அடைந்திருக்கும்: தீபக்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணதிற்கு பின்னர் அவரது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுக கட்சியை கபளீகரம் செய்து பின்னர் ஆட்சியையும் அவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவசரகதியில் செயல்பட்டனர்.


 
 
ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்கியதை அதிமுகவினரே விரும்பவில்லை. உச்சக்கட்டமாக அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தேர்தலில் போட்டியிடாமலே முதல்வர் நாற்காலியில் அமர துடித்தார் சசிகலா.
 
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனையடுத்து சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் கட்டுப்பாட்டில் வந்தது அதிமுக. அவரது குறுக்கீடுகளும் ஆட்சியில் இருந்து கொண்டு தான் இருந்தது. அடுத்தடுத்து வழக்கு, நெருக்கடிகள், இரட்டை இலை சின்னம் முடக்கம் போன்றவற்றால் தினகரன் மீது கோபத்தில் இருந்தனர் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும்.
 
இந்நிலையில் ஒரு வழியாக சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவர்கள் குடும்பத்தை கட்சியில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைப்பதாக ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஆலோசித்து முடிவெடுத்தனர். மேலும் ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்கும் சம்மதம் தெரிவித்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் மீட்க முடிவு செய்துள்ளனர்.
 
இதனையடுத்து தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது எனவும், இப்போது தான் என் அத்தையின் ஆன்மா நிம்மதி அடைந்திருக்கும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னரே சசிகலா அணியில் இருந்த தீபக் தினகரனை எதிர்த்தும் ஓபிஎஸை ஆதரித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.