1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (13:09 IST)

சசிக்கலா, டிடிவி தினகரனுக்காக பண டீல் பேசினார்கள்! – ஜெயக்குமார் ஓபன் டாக்!

அதிமுகவை வலுப்படுத்த தினகரன், சசிக்கலாவுடன் பேச தயார் என ஓபிஎஸ் கூறியுள்ளதற்கு ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு முடிவுகள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மீண்டும் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கிறார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சசிக்கலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க தானே நேரில் சென்று பேசவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ்சின் இந்த கருத்து குறித்து பேசியுள்ள ஜெயக்குமார் “ஓபிஎஸ் சினிமாவில் நடிக்க போயிருந்தால் சிவாஜி, ரஜினி போன்றவர்களை தோற்கடித்திருப்பார்கள். அதிமுகவில் சசிக்கலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு இடமில்லை. பணத்திற்காக ஆசைப்பட்டு அணி தாவுகின்றனர். ஓபிஎஸ்சின் செயல்பாடுகள் கட்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

சசிக்கலா, தினகரன் சார்பில் எனக்கு பெட்டி பெட்டியாக பணம் தரப்படும் என ஆசைக்காட்டினார்கள். ஆனால் இதற்கெல்லாம் மயங்குபவன் இல்லை நான்” என அவர் கூறியுள்ளார்.