வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (14:07 IST)

தமிழ் வாசிக்கத் தெரியாத 6 ஆம் வகுப்பு மாணவர்கள்.. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் பல பள்ளிகளில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தமிழ் வாசிக்கத் தெரியாத நிலையில் இருப்பதால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தமிழகத்தில் 2009 ஆம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், 14 வயது வரை, அனைத்து மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதுமின்றி, தேர்ச்சி செய்யப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கவனம் செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையால் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாத நிலை உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்து, உயர்நிலை பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறனை, தமிழக அரசு பள்ளி ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அந்த ஆய்வில், ஆறாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்கள், தமிழ் வாசிக்க திணறியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது அந்த மாணவர்கள் படித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு, அரசு பள்ளி ஆய்வாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.