மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை பகுதியை சேர்ந்த சுருதி மற்றும் விஷ்ருத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விஷ்ருத் தனது மனைவி சுருதியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுருதி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை, தனது மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த விஷ்ருத், யாரும் இல்லாத நேரத்தில் திடீரென கத்தியை எடுத்து, சுருதியின் வயிற்றில் மூன்று முறை குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இந்தக் கொடூர சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் விஷ்ருத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற இந்த கணவனால், குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது.
Edited by Siva