செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (15:27 IST)

மாட்டு சூப் சாப்பிட்ட இளைஞருக்கு கத்தி குத்து- நாகையில் பதற்றம்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாட்டு சூப் சாப்பிட்ட முஸ்லீம் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டம் பொரவைக்குறிச்சியை சேர்ந்தவர் முகமது பைசான். கடந்த 9ம் தேதி மாலை கடைத்தெரு பக்கமாக சென்றவர் அங்கு மாட்டு சூப் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதை புகைப்படமெடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அவரது முகநூல் வட்டத்தில் இருந்த இந்து இளைஞர்கள் பார்த்து கடுப்பாகியுள்ளனர்.

உடனே சில இளைஞர்கள் கூடி அவரை தாக்குவதாக திட்டமிட்டுள்ளனர். முகமது பைசான் கடைவீதி வழியாக சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்து வழிமறித்த மர்ம கும்பல் கத்தியால் அவரை குத்தியுள்ளது. பிறகு கம்பி, கட்டை போன்ற பொருட்களால் அவரை தாக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர்.

அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக பைசானை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பைசானின் பெற்றோர் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ஆட்பாட்டம் செய்வோம் எனவும் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு பைசானை தாக்கிய தினேஷ்குமார், மோகன்குமார், கணேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர். மாட்டு சூப் குடித்ததற்காக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.