செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (10:06 IST)

டெல்டாவில் செம மழை! - சம்பா சாகுபடிக்கான உயிர் நீராக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் வடகிழக்கு  பருவ மழை தீவரமடைந்து வரும் நிலையில்  நாகை  உள்ளிட்ட 15  மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
குறிப்பாக நாகை , திருவாரூர், மயிலாடுதுறை,கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று  காலை முதலே பரவலாக கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாகை, கீழ்வேளூர், காக்கழனி வேளாங்கண்ணி, திருப்பூண்டி,  கீழையூர், திருக்குவளை, வலிவலம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உள் கிராமங்களிலும் விடிய விடிய  கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால்  நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கனமழை காரணமாக தாழ்வாக உள்ள பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 111.20 மி.மீ (11.1செ.மீ), கீழ்வேலூரில் 118.35மி.மீ(11.8செ.மீ, திருக்குவளையில் 35.30(3.5செ.மீ), வேதாரண்யத்தில் 87.06(8.7செ.மீ) மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கீழ்வேலூரில் 11.8செ.மீ மற்றும் நாகையில் 11.1செ.மீ மழை பதிவாகி உள்ள நிலையில்  மாவட்டத்தில் மொத்த சராசரியாக கடந்த  24 மணிநேரத்தில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்பொழுது பெய்து வரும் இந்த மழை சம்பா சாகுபடிக்கான உயிர் நீராக அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள் இதே மழை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீடித்தால் சம்பா பயிர்களில் மழை நீர் சூழ்ந்து சற்று பாதிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.