1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (13:13 IST)

5 நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட வாய்ப்பு- சீமான் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதை கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளதாவது:

''திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

இக்கைதும், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 5 நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட வாய்ப்புள்ளது எனும் செய்தியும் தமிழ்நாடு அரசின் பாசிசப் போக்கினைக் காட்டுகிறது. அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.